தமிழகத்தில் பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், உருவாக்கப்பட்ட திட்டம்தான் “புதுமைப்பெண் திட்டம்”. இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட “புதுமைப்பெண் திட்டத்தை” கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், நடப்பு ஆண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவு பெற்ற நிலையில், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 416 இடங்கள் நிரம்பி உள்ளது.

இந்நிலையில், அரசு கலை கல்லூரிகளில் நிரப்பப்பட்ட இடங்களில் மொத்தம் 56 ஆயிரத்து 7 பேர் மாணவிகள் ஆவர். இவர்களில் சுமார் 27 ஆயிரத்து 608 மாணவிகள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் என்பதால் இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.