தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகள் மூலமாகத்தான் பணியாளர்கள் தேர்வு செய்யபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வை TNPSC நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அடிப்படையில் குரூப் 4 பதவிகளில் இருக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, 7 ஆயிரத்து 301 ஆக இருந்த குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் தற்பொழுது 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் சென்னையில் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். அனைத்து திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மாற்றுத்திறனாளி மாணவர்கள் கட்டாயமாக பயன்படுத்திக் கொள்ளும் படியும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இந்த பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை அறிய 9499966023 என்கிற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.