
தமிழகத்தில் கடந்த மாதம் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 100 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தி வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தமிழகத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், தற்பொழுது வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்காளதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே, இன்று மாலை கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை, நாகை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.