தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிகள்: தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு மற்றும் மதிப்பெண்கள் வழங்கும் விதிமுறைகளில் மாற்றம் செய்து, புதிய வழிகாட்டுதல்களை தமிழக வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது

மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி விதிகள் – கிராம உதவியாளர்கள் நியமனம் – திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கூடுதல் தலைமை செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பார்வை:
1) அரசாணை (எம்.எஸ்) எண் 625, வருவாய்த்துறை. நாள் 06.07.1995.
2) அரசாணை (எம்.எஸ்) எண் 521, வருவாய்த்துறை. நாள்17.06.1998.
3) அரசாணை (எம்.எஸ்) எண் 375, வருவாய்த் (பணி-8(1)) துறை, நாள்.19.10.2015.
4)அரசாணை (நிலை) எண் 574, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணிகள் அலகு/பணி-8(1) பிரிவு, நாள் 17.10.2020
5) அரசாணை (நிலை) எண் 97 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 11.03.2024
6) இவ்வலுவல கடித எண் வ.நி 2(2)/ 02-28/1/2024 நாள் 17.03.2025 மற்றும் 26.05.2025
7) அரசாணை (நிலை) எண் 266, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 22.05.2025
8) அரசாணை (நிலை) எண் 312, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 04.06.2025
பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் கடிதங்களின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
2) பார்வை (5) -ல் காணும் அரசாணையில் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட 2,299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
3 ) பார்வை (8) -ல் காணும் அரசாணையில், கிராம உதவியாளர்கள் தேர்வுமுறை மற்றும் பணிநியமனத்தின் போது மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
4) எனவே, பார்வை (8) -ல் காணும் அரசாணையினை பின்பற்றி, மேற்படி பார்வை (5)-ல் காணும் அரசாணையில் அனுமதிக்கப்பட்ட 2,299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி:
-
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் SSLC தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
-
இருசக்கர வாகன உரிமம்: உரிமம் இருந்தால் தேர்வு தேவையில்லை. மிதிவண்டி/வாகனம் ஓட்டும் திறன் இருந்தால், தேர்வு நடத்தப்பட்டு அதற்கும் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
-
தமிழ் மொழி திறன்: வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்களுக்கேற்ப, நேரில் பரிசோதிக்கப்பட்டு 30 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
-
வசிப்பிடம்: அதே கிராமத்தில் இருப்பவருக்கு 35 மதிப்பெண்கள், தாலுகா எல்லைக்குள் இருப்பவருக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படலாம்.
-
நேர்காணல்: வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் பிற அலுவலர்கள் அடங்கிய குழுவினரால் நடத்தப்படும் நேர்காணலுக்காக 15 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
ஒட்டுமொத்த செயல்திறன்: விண்ணப்பதாரரின் தனிப்பட்ட திறன்களை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 6 முதல் அதிகபட்சம் 12 மதிப்பெண்கள் வழங்கப்படலாம். 6-ஐ விட குறைவாகவோ, 12-ஐவிட அதிகமாகவோ மதிப்பெண்கள் வழங்கக்கூடாது.
மேலும், நியமன அறிவிப்புகள் உரிய விதிகளின்படி வெளியிடப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். தேர்வு முறைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா என அவர்கள் உறுதி செய்த பின்பே முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.