இந்தியாவில் ஒரு தனி மனிதனின் முக்கிய அடையாள ஆவணமாகவும் பார்க்கப்படுவது ஆதார் அடையாள அட்டையத்தான். அதுமட்டுமல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு போன்றவற்றுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறுகையில், இந்திய குடிமக்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கலாம் என தெரிவித்தது. அதன்பின் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 14 வரை புதுபித்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதார் தகவல்களை எப்போதும் பொதுமக்கள் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், அதனை ‘my aadhar’ என்ற இணையதளம் வாயிலாக செப். 14 க்குள் புதுபித்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.